கிடுக்கிபிடி, தடுப்பாட்டம் ஆடி திருப்பூர் ஏ.வி.பி அணியை
துவம்சம் செய்த கோவை கே.எஸ்.ஜி கல்லூரி முதலிடம்
பாரதியார் பல்கலைக் கழகத்தின் சார்பில் மண்டலம் "பி" பிரிவு மகளிர் கல்லூரி அளவிலான கபடிபோட்டிகள் திருப்பூர்,வஞ்சிபாளையம் தீரன் சின்னமலை பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வளாகத்தில் 2 நாட்கள் நடந்தது. நாக் அவுட் முறையில் நடந்த இந்த போட்டியில் கோவை, திருப்பூர், நீலகிரி,ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த 11 மகளிர் கல்லூரி அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். மாவட்ட கபடி கழக நடுவர்கள் ஏ.சி. சேகர்,மருதையன், சௌந்தரபாண்டியன்,சிவகுரு,பாக்கியராஜ்,சுபஇளங்கோ ஆகியோர் நடுவர்களாக பணியாற்றி னர். இன்று 3 மற்றும் நான்காம் இடத்திற்கு நடந்த இறுதிப் போட்டியில் கோவை நிர்மலா கல்லூரியும், திருப்பூர் ஏ.ஜி கல்லூரியும் மோதின. முடிவில் நிர்மலா கல்லூரி 30 புள்ளிகள் எடுத்து 3 ஆம் இடமும், ஏ.ஜி கல்லூரி 6 புள்ளிகள் எடுத்து 4 ஆம் இடமும் பெற்றன. அதேபோல் முதல் இடத்திற்கான கபடி போட்டியில் திருப்பூர் ஏ.வி.பி மகளிர் கல்லூரியும், கோவை கே.எஸ்.ஜி கல்லூரியும் மோதின. இதில் கோவை கே.எஸ்.ஜி மகளிர் கல்லூரி அணியினர் ஆரம்பம் முதலே கிடுக்கிபிடி ஆட்டம் ஆடியும்,தடுப்பாட்டம் ஆடியும் ஏ.வி.பி அணியை துவம்சம் செய்தனர். முடிவில் கே.எஸ்.ஜி கல்லூரி 30 புள்ளிகள் எடுத்து முதலிடம் பெற்று அபார வெற்றி பெற்றது. ஏ.வி.பி அணியினர் 10 புள்ளிகள் மட்டும் எடுத்து பரிதாபமாக தோற்று 2 ஆம் இடம் பிடித்தனர்.வெற்றி பெற்ற முதல் மற்றும் இரண்டாம் இடம்பெற்ற அணிகள் பாரதியார் பல்கலைக் கழக மாவட்ட அளவில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். போட்டியில் சிறந்த விளையாட்டு வீராங்கணைகளாக கே.எஸ்.ஜி மகளிர் கல்லூரி கனகு,ஏ.வி.பி மகளிர் கல்லூரி கோபிகா நிர்மலா மகளிர் கல்லூரி அஸ்கிலா, திருப்பூர் ஏ.ஜி கல்லூரி ஸ்வேதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு கொங்கு வேளாளர் அறக்கட்டளை செயலாளரும், தீரன் சின்னமலை கல்லூரியின் தாளாளருமான கீதாஞ்சலி கோவிந்தப்பன் தலைமை தாங்கினார். கொங்கு வேளாளர் அறக்கட்டளை துணைத் தலைவர் பி.வி.எஸ்.முருகசாமி, கிரி ரங்கசாமி, பி.கே.எஸ். காளியப்பன், அம்மாசைக்குட்டி, இன்ஜினியர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி ரேச்சல் நான்சி பிலிப் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருப்பூர் மாவட்ட கபடி கழக சேர்மன் கொங்கு வி.கே. முருகேசன்,மாநில பொருளாளரும்,மாவட்ட கபடிகழக செயலாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளை பாராட்டி கோப்பைகளை வழங்கினர். முடிவில் கல்லூரி முதல்வர் மோகனசௌந்தரி நன்றி கூறினார். போட்டிக்கான ஏற்பாடுகளை தீரன் சின்னமலை கல்லூரி நிர்வாக அதிகாரி சுரேந்தர்,கல்லூரி உடற்கல்வி இயக்குனர் ஸ்ரீ பிரியங்கா ஆகியோர் செய்து இருந்தனர்.
விழாவில் மாவட்ட கபடி கழக தலைவர் ரோலக்ஸ் பி. மனோகரன், பொருளாளர் கன்னிமார்ஸ் ஆறுச்சாமி, துணைச் சேர்மன் முருகானந்தம், துணைத் தலைவர் கொ.ராமதாஸ், செய்தித் தொடர்பாளர் சிவபாலன், கௌரவ உறுப்பினர் தம்பி வெங்கடாசலம், சி.பி.எஸ்.சி. பள்ளி முதல்வர் கற்பகம், தமிழ் பேராசிரியை காயத்திரி, திருப்பூர் மாவட்ட கபாடி கழக நடுவர் குழு சேர்மன் நல்லாசிரியர் முத்துசாமி, டெக்னிக்கல் கமிட்டி ரங்கசாமி மற்றும் கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.